சத்தீஸ்கரில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் - பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ரானு சாஹு. 2010-ம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று சத்தீஸ்கர் மாநில வேளாண்துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை ரானு சாஹு வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது இவர் சட்டவிரோத மாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரானு சாஹுவை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுகுறித்து அமலாக்கப்பிரிவு வழக்கறிஞர் சவுரவ் பாண்டே கூறியதாவது: ரானு சாஹுநிலக்கரி வரி வழக்கில் இவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக பணப் பரிமாற்றத்தில் இவர் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2-வது ஐஏஎஸ் அதிகாரி இவர். இதற்கு முன்பு இவர் கோர்பா, ராய்கர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அந்த மாவட்டங்களில் அதிக
அளவு நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அவர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது நிலக்கரி வரி தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் சவுரவ் பாண்டே கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE