புதுடெல்லி: ஏழாவது ரோஜ்கர் மேளாவில் 70,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார்.
மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 3.5 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ள நிலையில் 7-வது ரோஜ்கர் மேளா திருவிழா இன்று நடைபெறுகிறது.
இதன்படி மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று பணி நியமனக் கடிதங்களை வழங்க உள்ளார்.
அப்போது நாடு முழுவதும் 44 இடங்களில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பணி நியமன ஆணைகளை வழங்குவார்கள். வருவாய் துறை, நிதித் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரத் துறை, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய ஊழியர்கள் பணியில் சேர உள்ளனர்.
» சிறை தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: ராகுல் காந்தி மனு ஆக.4-ல் விசாரணை
புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள், கர்மயோகி பிராரம்ப் ஆன்லைன் திட்டத்தின் மூலம் சிறப்பு பயிற்சி பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.