கொல்கத்தா: மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ஆடையின்றி பெண் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு, அம்மாநில காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் பஞ்ச்லா கிராமத்தில் அண்மையில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர், வாக்குச்சாவடிக்கு வந்தார். அவரை திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஹிமந்தா ராய் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் ஆடைகளை அகற்றி கிராமம் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் சென்று மானபங்கம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த பெண், போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஹிமந்தா ராய் உள்ளிட்ட 40 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனிடையே, இத்தகைய சம்பவம் நடந்ததற்கான எந்த சாட்சியங்களும் இல்லை என்று மேற்கு வங்க டிஜிபி விளக்கம் அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.