பிஎல்ஐ திட்டத்தில் பலன்பெற 176 எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தேர்வு - மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிஎல்ஐ என்றழைக்கப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தில் 176 எம் எஸ்எம்இ நிறுவனங்கள் பலன்பெற உள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சரான ஸ்ரீசோம் பிரகாஷ் தகவல் அளித்தார். இதன் மீது நாடாளுமன்ற மாநிலங்களயில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதன்மீது தனது எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஸ்ரீ சோம் பிரகாஷ் குறிப்பிட்டதாவது: “சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கில் 14 துறைகளுக்கு மத்திய அரசு பிஎல்ஐ திட்டத்தைக் கொண்டுவந்தது. இதற்கு ரூ.1.97 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

கைப்பேசிகள், மருந்து, மருத்துவ உபகரணங்கள், வாகன மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்னணு சாதனங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள், ஐவுளி, உணவு பதப்படுத்தல், சோலார் பேனல், பேட்டரி, டிரோன் உட்பட 14 பிரிவுகள் பிஎல்ஐ திட்டத்தில் உள்ளன.

இதுவரையில் இந்த 14 துறைகளிலிருந்து 733 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 176 நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்கள், தொலைத் தொடர்பு, உணவுப் பதப்படுத்தல், டிரோன் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்(எம்எஸ்எம்இ) ஆகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE