கருப்பைநீக்க அறுவை சிகிச்சைகள் 2.3 சதவிகிதம் அதிகரிப்பு -மக்களவையில் மத்திய அரசு தகவல் 

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை எண்ணிக்கை 2.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த தகவல், மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார் இன்று தெரிவித்தார்.

இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், ''கருப்பை அகற்றுதல் கண்காணிப்புக் குழுக்கள் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளனவா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் இல்லையெனில், அதற்கான காரணங்கள் மற்றும் அரசு இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அதற்கான முன்மொழிவுகள் யாவை?

தனியார் மருத்துவ மனைகளில் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகள் பெண்களின் சம்மதம் பெறப்படாமலும், அதன் பக்க விளைவுகள் குறித்து அவர்களுக்குப் போதிய விளக்கம் அளிக்கப்படாமலும் நெறியற்ற முறையில் மேற்கொள்ளப்படுவது அதிகரித்து வருவதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா? அத்தகைய தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஏதேனும் வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசாங்கம் வழங்கியிருக்கிறதா?'' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி ப்ரவின் பவார் எழுத்துமூலம் அளித்த பதில் பின்வருமாறு: 'நெறியற்ற முறையில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை இந்திய அரசு 2022 அக்டோபரில் அறிமுகப்படுத்தியது. அவை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. கருப்பை நீக்க அறுவை சிகிச்சை தொடர்பான கண்காணிப்புக் குழுக்களை தம் மாவட்ட அளவில் அமைப்பது உட்பட வழிகாட்டுதல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்திய அளவில் தேசிய கருப்பை நீக்க கண்காணிப்புக் குழு (என்எச்எம்சி) இந்திய ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் நேஷனல் ஹெல்த் மிஷனின் கூடுதல் செயலாளர் மற்றும் பணி இயக்குநரின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. 2019-2021 க்கு இடையிலான தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5 (என்எப்எச்எஸ்-5 ) இன்படி, தனியார் மருத்துவ மனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2015-16 இல் என்எப்எச்எஸ்-5 இன்படி அது, 67.3 சதவிகிதமாக இருந்தது. 2019-2021 இல் அது 69.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையில்லாத விதத்தில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கறாராக பின்பற்றும்படிக் கூறி, இந்திய அரசு 2022 அக்டோபர் 4 இல் உத்தரவிட்டுள்ளது.' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நெறிமுறைகளில் இடம்பெற்ற அம்சங்கள் பின்வருமாறு: 'அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை குறித்த விவரங்களை அதற்கெனக் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் சரியாக நிரப்புவதற்கு மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பு அதிகாரி வழிவகை செய்யவேண்டும். மாவட்ட அளவில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்களின் வரிசைப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அதில் அவரது வயது, தொழில், முந்தைய மருத்துவ/அறுவை சிகிச்சை வரலாறு, கருப்பை நீக்கம் செய்ததற்கான காரணம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

40 வயதுக்குள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் குறித்த விவரங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டியது மாவட்ட அளவிலான பொறுப்பு அதிகாரியின் கடமையாகும். பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு இதைப்பற்றி தேவையான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவை தவிர, மாநில அளவிலான குழு கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் தேவையில்லாமல் செய்யப்படுகின்றனவா என்பதை ஆராய மாவட்ட அளவிலான தரவுகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஆய்வு செய்ய வேண்டும்.' இவ்வாறு மத்திய இணை அமைச்சர் வெளியிட்ட பதிலின் இணைப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE