குஜராத்தில் விபத்து நடந்த இடத்தில் கூட்டத்துக்குள் கார் புகுந்து 9 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் விபத்து நடந்த இடத்தில் கூடியிருந்தவர்கள் மீது வேகமாக சென்ற கார் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து துணை ஆணையர் நீதா தேசாய் கூறியதாவது:சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் பாலத்தில் புதன்கிழமை நள்ளிரவு 2 வாகனங்கள் விபத்தில் சிக்கின. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற 2 போலீஸார் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அங்கு அவ்வழியாக சென்றவர்கள் பலர் கூடியிருந்தனர். இந்நிலையில், அவ்வழியாக அதிவேகமாக வந்த ஜாகுவார் கார் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதியதுடன் அங்கிருந்த கூட்டத்துக்குள் புகுந்தது.

இதில் 2 போலீஸார் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், விபத்துக்குள்ளான காரின் ஓட்டுநர் தத்யா படேலும் அடங்குவார். குடிபோதையில் இந்த விபத்து நிகழவில்லை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் அளவுக்கு அதிகமான வேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொள்ளும். இவ்வாறு நீதா தேசாய் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE