கரோனா கால ஜம்போ சென்டர் ஊழல் வழக்கில் சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உதவியாளர் கைது

By செய்திப்பிரிவு

மும்பை: கரோனா காலத்தில் மும்பையின் வொர்லி பகுதியில் ஜம்போ சென்டர்கள் அமைக்கப்பட்டதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உதவியாளர் சுஜித்கர் பட்கர் மற்றும் மூத்த மருத்துவர் கிஷோர் பைசூர் ஆகியோரை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. இவர்கள் இந்த திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக படுக்கை வசதிகளுடன் கூடிய மிகப் பெரியசிகிச்சை மையத்தை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தம் சஞ்சய் ராவத்தின் உதவியாளரான சுஜித்கர் பட்கர் பங்குதாரராக இருந்த லைப்லைன் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதில், பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டதையடுத்து அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE