புதுடெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழுவுக்கு 50 சதவீத பெண் உறுப்பினர்களை நியமித்து பாலின சமத்துவத்தை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களவைத் தலைவர் இல்லாத நேரங்களில் அவையை நடத்தும் பொறுப்பு துணைத் தலைவர்கள் வசம் செல்லும். தற்போதைய மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, புதிய குழு சீரமைக்கப்பட்டது. அவைத் தலைவர் ஜக்தீப் தன்கரால், மொத்தம் 8 பேர் துணைத் தலைவர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், வரலாற்றில் முதன்முறையாக பாலின சமத்துவம் அமல்படுத்தப்பட்டுள்ளது. துணைத் தலைவர் குழுவுக்கு 4 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நியமித்துள்ளார்.
இந்தக் குழுவில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பெண் உறுப்பினர்களும் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள். நாகாலாந்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணான பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ் பாங்னோன் கொன்யாக், பி.டி.உஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஃபௌசியா கான், பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த சுலதா தியோ ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநிலங்களவை துணைத் தலைவர்களாவர்.
இவர்களைத் தவிர, வி.விஜயசாய் ரெட்டி, கன்ஷியாம் திவாரி, டாக்டர் எல் ஹனுமந்தய்யா, சுகேந்து சேகர் ரே ஆகிய 4 ஆண் மாநிலங்களவை உறுப்பினர்கள் துணைத் தலைவர்களின் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.