குஜராத் கலவர வழக்கு | தீஸ்தாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தீஸ்தா சீதல்வாட்டுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இந்த வழக்கில் அவர் உடனடியாக சரணடையுமாறு கூறிய குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவை உச்ச நீதிமன்றம் செய்தது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை கடந்த ஆண்டு (2022) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் போலீஸார் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை எதிர்த்து சீதல்வாட் உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் காரணமாக போலீஸ் மற்றும் நீதிமன்றக் காவல் முடிந்ததுமே தீஸ்தா விடுவிக்கப்பட்டார். ஆனால், இந்த வழக்கில் அவர் வழக்கமான ஜாமீன் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடினார். அந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி உச்ச நீதிமன்றத்தை அவர் நாடினார். நீதிபதிகள் பிஆர் கவாய், ஏஎஸ் போப்பண்ணா, திபாங்கர் தத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, குஜராத் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை வழங்கியது. வழக்கின் விசாரணையை ஜூலை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதன்படி அந்த வழக்கு புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தீஸ்தா சீதல்வாட்டுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததது. மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஜாமீன் உத்தரவில், ‘தீஸ்தாவின் பாஸ்போர்ட் விசாரணை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட வேண்டும். அவர் சாட்சிகளின் மீது எந்தவித ஆளுமையும் செலுத்த முயலக் கூடாது. குஜராத்தில் இருக்கும் பெரும்பாலன சாட்சிகளிடமிருந்து அவர் விலகியே இருக்க வேண்டும். இவற்றில், எதையாவது தீஸ்தா மீறினார் என்றால், அவரது ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தை குஜராத் போலீஸ் நாடலாம்’ என்று கூறியுள்ளது.

யார் இந்த தீஸ்தா சீதல்வாட்? - குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனித உரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான். அப்படி குஜராத்தில் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizen for Justice and Peace) அமைப்பின் சார்பில் செயல்படும் தீஸ்தா சீதல்வாட்டும் ஒருவர்.

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய தீஸ்தா சீதல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. சீதல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் சீதல்வாட், சீதா சீதல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் இந்தியா ஆகியவற்றில் பணிபுரிந்தார்.

1993-ல் மும்பையில் மதக் கலவரம் மூண்டபோது, அவரது வாழ்க்கை தலைகீழ் மாற்றம் கண்டது. பத்திரிகையாளர் என்பதால், கலவரச் சம்பவங்களுடன் அவர் நேரடியாக உறவாட வேண்டியிருந்தது. கண்ணெதிரே நிகழ்ந்த கலவரக் காட்சிகள், அவரை உலுக்கின. அதன் பிறகு முழுநேர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார். மத அடிப்படைவாதத்துக்கு எதிரான போர் என்ற பொருள் கொண்ட ‘கம்யூனலிஸம் காம்பாட்’ என்ற மாத இதழை, கணவர் ஜாவெத் ஆனந்துடன் சேர்ந்து தொடங்கினார். ஜாவெத் ஆனந்தும் ஒரு முன்னாள் பத்திரிகையாளர்தான். தொடர்ந்து மத அடிப்படைவாதச் சக்திகளுக்கு எதிராகவும், அவர்களது வெறுப்புணர்வுக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டு தீஸ்தா செயல்பட்டு வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE