புதுடெல்லி: மத்திய அரசின் கோவிட் வழிகாட்டல்களை மேலும் எளிதாக்கும் நோக்கில் சர்வதேச பயணிகள் மத்தியில் சீரற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த RT-PCR பரிசோதனை கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோவிட் 19 பரவல் தடுப்பிலும், தடுப்பூசி போட்டுக்கொண்டதிலும் சர்வதேச அளவில் எட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சாதனையைக் கருத்தில் கொண்டு சர்வதேச பயணிகளுக்கான கோவிட் 19 வழிகாட்டலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் எளிதாக்குகிறது. இந்த புதிய வழிகாட்டல் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பேரிடம் சீரற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த RT-PCR பரிசோதனை கைவிடப்படுகிறது.
அதேநேரத்தில், கரோனா காலகட்டத்தில் விமான நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பயணிகள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். கோவிட் 19 தொற்று சூழலை மத்திய சுகாதாரத்துறை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.