ஜம்மு காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், பூஞ்ச் மாவட்டத்தின் சுரான்கோட் தாலுகாவில் உள்ள சிந்தாரா, மைதானா கிராமங்களுக்கு அருகில் ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் ராணுவ வீரர்களும் இணைந்து நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இரவு 11.30 மணியளவில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இம்மோதலுக்குப் பிறகு தீவிரவாதிகள் மாயமானதால் ட்ரோன்கள் மற்றும் இரவு கண்காணிப்பு சாதனங்கள் மூலம் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் இரு தரப்பிலும் மீண்டும் மோதல் ஏற்பட்டு, கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் வெளிநாட்டு தீவிரவாதிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE