கடப்பா: நாடு முழுவதும் தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று குறைந்த விலையில் தக்காளி விற்கப்பட்டதால், பொதுமக்கள் குவிந்தனர். சுமார் 2 கி.மீ வரை நீண்ட வரிசையில் நின்று மக்கள் தக்காளியை வாங்கிச் சென்றனர்.
தக்காளி விலை ஆந்திர மாநிலத்தில் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. இதில் கடப்பாவில் நேற்று காலை விவசாயி ஒருவர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளியை ரூ.50-க்கு விற்றார். இந்தத் தகவல் வேகமாக பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த தக்காளி வியாபாரியை சூழ தொடங்கினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. காவல் துறையினர் வந்து மக்களை வரிசையில் நிற்கச் செய்து நெரிசலைக் கட்டுப்படுத்தினர். இதையடுத்து மக்கள் வரிசையை கடைபிடிக்க ஆரம்பித்தனர். 2 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தலா 3 கிலோ தக்காளியை மக்கள் வாங்கிச் சென்றனர்.