2024-ல் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்பது உலக நாடுகளுக்கே தெரியும் - என்டிஏ கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்மறை எண்ணங்களோடு அமையும் கூட்டணி வெற்றி பெறாது என்று எதிர்க்கட்சிகள் கூட்டணியை பிரதமர் மோடி சாடியுள்ளார்.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லி அசோகா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்றுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த தீவிர நடவடிக்கையாக மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, "என்டிஏ (NDA) என்றால் புதிய இந்தியா, வளர்ச்சி மற்றும் அபிலாஷைகள். அடல் பிஹாரி வாஜ்பாயின் மரபு தான் தேசிய ஜனநாயக கூட்டணி. எல்.கே. அத்வானி, பாலாசாகேப் தாக்கரே மற்றும் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தனர். இக்கூட்டணி யாரையும் எதிர்க்க உருவாக்கப்பட்டது அல்ல, மாறாக நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி மற்றும் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டது. இது நிர்பந்தத்தால் உருவாக்கப்பட்டது அல்ல.

இந்தியாவில் கூட்டணிகளின் நீண்ட பாரம்பரியம் உள்ளது. ஆனால் எதிர்மறை எண்ணங்களோடு உருவாக்கப்பட்ட கூட்டணி ஒருபோதும் வெற்றி பெறாது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், எப்போதும் நேர்மறையான அரசியலை செய்தோம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆக்கபூர்வமான அரசியல் செய்தோம், எதிர்மறை அரசியலில் ஈடுபடவில்லை. ஜனநாயகத்தை வலுப்படுத்த, எங்களது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியுள்ளோம். எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள், அப்போதைய அரசுகளில் மோசடிகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம். அதேநேரம், ஆளும் அரசுகளுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் வெளிநாடுகளின் உதவியைப் பெற்றதில்லை. நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களிலும் நாங்கள் தடைகளை ஏற்படுத்தவில்லை.

25 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்தப் பயணத்தில் இன்னொரு தற்செயல் நிகழ்வும் தொடர்புடையதாக உள்ளது. வரவிருக்கும் 25 ஆண்டுகளில் ஒரு பெரிய இலக்கை அடைய நமது நாடு பெரிய இலக்குகளை எடுத்துக்கொண்டிருக்கும் நேரம் இது. அந்த இலக்குகள் சுயசார்பு இந்தியா மற்றும் வளர்ச்சி மிகுந்த இந்தியா. ஒரு நாட்டில் நிலையான ஆட்சி அமையும் போது, அது அந்த நாட்டின் போக்கையே மாற்றும் துணிச்சலான முடிவை எடுக்கும். ஸ்திரமான மற்றும் வலுவான அரசால் இந்தியா மீதான உலகத்தின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசம் தான் முதல் முன்னுரிமை. தேசத்தின் பாதுகாப்பும், தேசத்தின் முன்னேற்றமும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதும்தான் முன்னுரிமையே. ஆனால், நாட்டை சீர்குலைக்க 1990களில் கூட்டணியை பயன்படுத்திய காங்கிரஸ், அரசுகளை உருவாக்கி மற்றவர்களை வீழ்த்தியது. 2014-க்கு முந்தைய கூட்டணி அரசுகள் எப்படியோ தப்பிப்பிழைத்தன. ஆனால் நாட்டிற்கு கொள்கை முடக்கம் ஏற்பட்டது. மேலும் பிரதமருக்கு மேலான உயர் கட்டளையிடுபவர்கள் இருந்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் கட்சியும் பெரிதோ, சிறியதோ இல்லை. 2014 மற்றும் 2019-ல் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தும், என்டிஏ கூட்டணி ஆட்சியே அமைக்கப்பட்டது. மகாத்மா காந்தி, பாபாசாகேப் அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா காட்டிய சமூக நீதியின் பாதையில் தேசிய ஜனநாயக கூட்டணி நடந்து வருகிறது. அரசியலில் போட்டி இருக்கலாம் ஆனால் பகை இருக்காது. துரதிர்ஷ்டவசமாக, இன்று எதிர்ப்பு நம்மை துஷ்பிரயோகம் செய்வதை அதன் அடையாளமாக மாற்றியுள்ளது. நாங்கள் எப்போதும் இந்தியாவை அனைத்து அரசியல் நலன்களுக்கும் மேலாக வைத்துள்ளோம்.

அடுத்த ஆண்டு இந்தியா தேர்தலை சந்திக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். தேர்தலுக்கு செல்ல உள்ள நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் முன் உலக நாடுகள் இருமுறை யோசிக்கும். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை இதில் வேறுவிதமாக உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் நீண்ட கால ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன. ஏனென்றால் 2024ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்பது உலக நாடுகளுக்குகூட தெரியும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று அவர்களுக்குத் தெரியும்.

நாங்கள் நிகழ்காலத்திற்காக மட்டும் உழைக்காமல், எதிர்காலத்தை சிறப்பாக்க பாடுபடுகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில், இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். 2014ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு விகிதம் 38 சதவீதமாக இருந்தது. அதுவே 2019ல் 45 சதவீதமாக இருந்தது. ஆனால் வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில், இது 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். பொது மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஹிஸ்டரியையும் கெமிஸ்ட்ரியையும் பார்க்கிறார்கள். அதனால்தான் இந்த கணக்கை வெற்றியாகும் என சொல்கிறேன்.

நான் தவறு செய்யலாம் ஆனால் தவறான நோக்கத்துடன் எதையும் செய்ய மாட்டேன். எனது கடின உழைப்பு, முயற்சிகளால் எந்தக் கல்லையும் விட்டு வைக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். எனது உடலின் ஒவ்வொரு துகளும், எனது நேரத்தின் ஒவ்வொரு நொடியும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி அதிகாரத்தின் நிர்ப்பந்தத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. மேலும் அது வாரிசு அரசியலை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சாதி மற்றும் பிராந்தியவாதத்தை மனதில் கொண்டு நாட்டிற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் கூட்டணி. பேராசையால் இந்தக் கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. கேரளாவில் இடதுசாரிகளும், காங்கிரஸும் எதிரெதிராக இருந்தாலும், பெங்களூரில் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வரலாமே தவிர ஒன்றாக வர முடியாது.

வாக்காளர்களின் அறிவுத்திறனை எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிடுகின்றன. ஆனால் சுயநல ஆதாயங்களின் பசை என்னவென்று மக்களுக்குத் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE