“பணிவும் அர்ப்பணிப்பும் மிக்க தலைவர்” - உம்மன் சாண்டிக்கு பிரதமர் மோடி, தலைவர்கள் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "பொது மக்களின் பணிக்காக தனது வாழ்க்கையை ஒப்படைத்த மிகவும் பணிவான மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவர்" என்று மறைந்த கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக உடல் நலன் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரளா மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 79.

பிரதமர் இரங்கல்: உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "உம்மன் சாண்டிஜியின் மறைவால், கேரளாவின் முன்னேற்றத்துக்காக உழைத்த, மக்கள் பணிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மிகவும் பணிவான மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரை நாம் இழந்துவிட்டோம். நாங்கள் இருவரும் எங்கள் மாநிலங்களின் முதல்வர்களாக இருந்தபோதும், அதற்கு பின்னர் நான் டெல்லி சென்ற பின்பும் எங்களுக்கிடையே நடந்த பல்வேறு உரையாடால்களை நான் நினைவுகூர்கிறேன். இந்த துயர்மிகுந்த சூழலில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்களுடன் இருக்கின்றது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கார்கே புகழஞ்சலி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உம்மன் சாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள குறிப்பில், "உம்மன் சாண்டிக்கு எனது புகழஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கான அவரது சேவையும், அர்ப்பணிப்பும் என்றும் நினைவில் கொள்ளப்படும். அவருடைய தொலைநோக்குப் பார்வை கேரள மாநில வளர்ச்சியில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கேரள மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டிக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். அவர் ஒரு சிறந்த அரசியல் ஆளுமை மற்றும் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஓர் உண்மையான மக்கள் தலைவர். உம்மன் சாண்டியின் குடும்பத்தினருக்கும், கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி இரங்கல்: முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நானும் உம்மன் சாண்டியும் ஒரே ஆண்டில்தான் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தோம். மாணவர்களாக இருக்கும்போதிருந்தே நாங்கள் அரசியலுக்கு வந்தோம். ஒரே காலகட்டத்தில் பொது வாழ்வில் ஈடுபட்டோம். அவருக்கு பிரியாவிடை செலுத்துவது கடினம். அவர் திறமையான நிர்வாகி. மக்களுடன் நெருங்கிப் பழகிய தலைவர்" என்று தெரிவித்துள்ளார்.

உம்மன் சாண்டியின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கேரள மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கேரள சட்டசபையில் அதிக காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் உம்மன் சாண்டி. தனது ஆஸ்தான தொகுதியான புதுப்பள்ளியை 18,728 நாட்கள் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி வரலாறு படைத்தவர். 51 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களுக்கும் மேலாக எம்எல்ஏவாக காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை கேரளத்தின் முதல்வராக பதவி வகித்தவர் உம்மன் சாண்டி.

இறுதிச்சடங்கு: பெங்களூருவில் உள்ள உம்மன் சாண்டியின் உடல் செவ்வாய்க்கிழமை கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இறுதிச்சடங்குகள் நடக்க இருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் விடி சத்தீசன் நிருபர்களிடம் கூறும் போது,"முன்னாள் முதல்வரின் உடல் பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மதியம் திருவனந்தபுரம் கொண்டுவரப்படும்.

உம்மன் சாண்டியின் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பாக பொதுமக்களின் அஞ்சலிக்காக கேரளா காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்படும். அதன்பின்னர் உடல், கோட்டயத்தில் உள்ள திருநகரி மைதானத்திற்கும், புதுப்பள்ளியில் உள்ள அவரது வீட்டிற்கும் கொண்டு செல்லப்படும். இறுதிச்சடங்கு வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புதுபாலியில் உள்ள தேவாலயத்தில் வைத்து நடைபெறும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE