காங். கூட்டணியில் மஜத இணையவில்லை: முன்னாள் முதல்வர் குமாரசாமி திட்டவட்டம்

By இரா.வினோத்


பெங்களூரு: காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியின் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ( மஜத) அழைப்பு வரவில்லை. என அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசிக்க, எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் திமுக, திரிணமூல் உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து குமாரசாமி கூறியதாவது: பெங்களூருவில் நடைபெறும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மஜதவுக்கு அழைப்பு வரவில்லை. அதனால் அந்த கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். ஒருமித்த கருத்து இல்லாத அந்த கூட்டணியால் எந்த மாற்றமும் ஏற்படாது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்துக்கும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை. அந்த கூட்டணிக்கு செல்வது குறித்து இன்னும் எங்களது கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்கவில்லை. இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா முடிவெடுப்பார். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

‘பாஜக-மஜத இடையே கூட்டணி பேச்சுவார்த்தை’: கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை கூறுகையில், '' வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக-மஜத இடையே கூட்டணி அமைய வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இரு கட்சி தலைவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். மஜத எங்களது கூட்டணியில் இணைந்தால் கர்நாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE