புதுடெல்லி: தக்காளி விலை கட்டுக்கு அடங்காமல் உயர்ந்துவரும் சூழலில் மத்திய அரசு இன்று (ஜூலை 16) முதல் தக்காளியை மாணிய விலையில் விற்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தலைநகர் டெல்லி, நொய்டா உள்ளிட்ட சில நகரங்களில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 500 இடங்களில் தக்காளி விலை நிலவரம் பற்றி மத்திய அரசு மேற்கொண்ட மறுஆய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று முதல் டெல்லி சுற்றுவட்டார நகரங்களில் தக்காளியை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு சற்றே ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.
இது தொடர்பான அரசு அறிக்கையில், "மத்திய அரசின் தலையீட்டால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளி கிலோ ரூ.90 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, நொய்டா, லக்னோ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர், ஆரா உள்ளிட்ட பகுதிகளில் இன்றே மத்திய அரசின் சலுகை விலையில் தக்காளி விற்பனை தொடங்கிவிட்டது. நேஃபட் - தேசிய விவசாயிகள் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் அமைப்பு மற்றும் தேசிய கூட்டறவு வாடிக்கையாளர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) இணைந்து இந்த விற்பனையை மேற்கொள்கிறது. விரைவில் இது நாடு முழுவதும் பல நகரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.