‘மோடி’ பெயர் அவதூறு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மோடி பெயர் அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளான காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது.

மோடி பெயர் வழக்கின் பின்னணி? - கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுலின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.

இதையடுத்து, சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, "ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை காரணமாக, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். இந்த தண்டனைக்கு தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால், அது ராகுல் காந்திக்கும், அவரைத் தேர்வு செய்த நாடாளுமன்ற தொகுதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்கில், நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறைக்குப் பின்னர் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், ஷெசன் நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதி செய்து மார்ச் 23-ம் தேதி வழங்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். மேலும், "இந்த வழக்கினைத் தவிர அவர் மீது மேலும் சில வழக்குகள் உள்ளன. வீர்சவர்காரின் பேரன் ஒருவரும் அவர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். என்றாலும் தண்டனையில் எந்த அநீதியும் இல்லை. முற்றிலும் இல்லாத காரணங்களுக்காக தடை கோரி வருகிறார். தண்டனையை நிறுத்தி வைப்பது விதி அல்ல. விதிவிலக்கு" என்று தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் மேல் முறையீட்டை சூரத் ஷெசன் நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் எதிர்பார்க்கப்பட்டபடியே உச்ச நீதிமன்றத்தை ராகுல் காந்தி நாடியுள்ளார்.

கேவியட் மனு தாக்கல்: இதற்கிடையில், ராகுல் காந்தியோ அல்லது அவர் சார்பிலோ குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தால், அதில் தனது தரப்பு வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று புர்னேஷ் மோடி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE