பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு குறித்த அவதூறு வழக்கு: கேஜ்ரிவால் ஜூலை 26-ல் ஆஜராக உத்தரவு

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: பிரதமர் மோடி பட்டம் பெற்றது குறித்து கேலி செய்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் ஜூலை 26-ம் தேதி நேரில் ஆஜராகும் படி அகமதாபாத் பெருநகர நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

முன்னதாக, இந்த வழக்கில் கேஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகியோர் ஜூலை 13-ம் தேதி நேரில் ஆஜராக பெருநகர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், டெல்லியில் கனமழை காரணமாக அவர்கள் இருவரும் ஆஜராக முடியாததால் விலக்கு அளிக்கக் கோரி அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் எஸ்.ஜே.பஞ்சால், ஜூலை 26-ல் கேஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி எம்.ஏ. பட்டம் பெற்றது தொடர்பான சான்றிதழின் நகல்களை வழங்க வேண்டும் என கேஜ்ரிவால் எழுப்பிய கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் அவருக்கு அபராதமும் விதித்தது.

இlதையடுத்து கேஜ்ரிவால் ட்விட்டரில், "பிரதமரின் பட்டப் படிப்பைத் தெரிந்துகொள்ளக்கூட உரிமை இல்லையா? சான்றிதழ் நகலைக் காட்ட குஜராத் பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? படிப்பறிவு இல்லாத அல்லது குறைவான படிப்பறிவை கொண்ட ஒரு பிரதமர் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவர்'' என்று தெரிவித்திருந்தார்.

அதேபோன்று, போலி பட்டத்தை உண்மையானது என்று நிரூபிக்கும் முயற்சியில் குஜராத் பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருவதாக சஞ்சய் சிங் குற்றம் சாட்டினார்.

இவர்களது கருத்து தங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி குஜராத் பல்கலைக்கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE