20-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர்: 19-ல் என்டிஏ நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில், “ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும். ஆகஸ்ட் 11-ம் தேதி வரை இக்கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத் தொடரின்போது, அவை நடவடிக்கைகள் மற்றும் விவாதங்களுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

இந்த கூட்டத் தொடர் பழையநாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே, பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டம் வரும் 19-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் சில முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE