ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

By என். மகேஷ்குமார்

ஓங்கோல்: ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், பொதிலி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஜ் (65). இவர் திருமண நிகழ்ச்சிக்காக காக்கிநாடா செல்ல ஆந்திர அரசு பேருந்தை வாடகைக்கு பேசினார்.

அதில் அப்துல் அஜீஜ்் உறவினர்கள், நண்பர்கள் திங்கட்கிழமை இரவு புறப்பட்டனர்.

அந்த பேருந்து நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் தர்மி எனும் ஊரின் அருகே சென்றபோது, சாலையின் ஒரு வளைவில் நிலை தடுமாறி, சாகர் தண்ணீர் கால்வாயில் சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், அப்துல் அஜீஜ் உள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும், பிரகாசம் மாவட்ட எஸ்பி மலிகா கார்கே தலைமையில், தீயணைப்பு படையினர், போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 40 பேர் வரை பஸ்ஸில் பயணித்துள்ளனர். இதில் 18 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஓங்கோல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உடனடியாக மீட்பு பணிகளை நடத்தி காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டு மென உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE