பிஹார் அரசு விளம்பரங்களில் துணை முதல்வர் தேஜஸ்வி படம் புறக்கணிப்பு

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள ராஜ்கிர் நகரில் மால்மாஸ் மேளாவை நடத்துவதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

பார்வையாளர்களை வரவேற்பதற்காக மாநில அரசு ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மற்றும் பிளெக்ஸ் போர்டுகளில் முதல்வர் நிதிஷ்குமாரின் புகைப்படம் மட்டும் இடம்பெற்றுள்ளது. ஆனால், துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்கு லஞ்சமாக நிலத்தைப் பெற்ற வழக்கில் தேஜஸ்விக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது, இந்த நிலையில், போஸ்டரில் தேஜஸ்வியின் புகைப்படம் இடம்பெறாதது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் சக்தி சிங் யாதவ் கூறுகையில், “இதில் எந்த யூகங்களுக்கும் இடமில்லை. விழாக்களில் கலந்து கொள்ளும் தலைவர்களின் புகைப்படங்கள் மட்டுமே போஸ்டரில் இடம்பெறும். அந்த வகையில், நிதிஷ் குமாரின் படம் மட்டும் அதில் இடம்பெற்றுள்ளது. துணை முதல்வரின் படத்தை போட வேண்டும் என்பது கட்டாயமில்லை’’ என்றார்.

இதில் எந்த அரசியலும் இல்லை என்று ஐக்கிய ஜனதா தள தேசிய பொதுச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE