லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் சிக்கியும், மின்னல் தாக்கியதாலும் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 10.
அரசுக் குறிப்பின்படி இந்த 34 பேரில் 17 பேர் மின்னல் தாக்கியதாலும், 12 பேர் நீரில் மூழ்கியும், 5 பேர் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் 68 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தப் பருவமழை காலம் தொடங்கியதிலிருந்து இதுவரை உத்தரப் பிரதேசத்தில் சராசரி மழையளவைவிட 11 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது.