புதுடெல்லி: டெல்லியில் மதுபான விற்பனை கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிசோடியா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு சொந்தமான சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நேற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில், மணிஷ் சிசோடியா மற்றும் அவரது மனைவி சீமா சிசோடியாவுக்கு சொந்தமான 2 சொத்துகள், ரூ.11 லட்சம் வங்கி இருப்பு ஆகியவையும் அடங்கும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர்களின் சொத்துகளும் முடக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.52 கோடி.