வன்முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மணிப்பூர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூரில் தொடரும் வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினர் தங்களுக்குபழங்குடியினர் அந்தஸ்து கோரி வருகின்றனர். மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி, நாகா பழங்குடி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு கடந்த2 மாதங்களாக வன்முறை சம்பவங்கள்நடந்து வருகின்றன. வன்முறைக்கு இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான பணியில் மாநில போலீஸார், ரிசர்வ் போலீஸ் படையினர், மத்திய ஆயுத போலீஸ் படையினர் (114 கம்பெனிகள்) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. 24 மணி நேரம் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது 5 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

குகி சமுதாயத்தினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோலின் கோன்சால்வ்ஸ், ‘‘குகி சமுதாயத்தினரை அழித்துவிடுவோம் என தீவிரவாதிகள் மிரட்டுகின்றனர். ஆனால், அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குகி இனத்தவருக்கு எதிரான வன்முறையை மாநில அரசே ஏவி விடுகிறது’’ என்று வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது: மணிப்பூர் நிலவரம் தொடர்பாக விரிவான அறிக்கையை மாநில அரசு தரப்பு தாக்கல் செய்ய வேண்டும். சட்டம் - ஒழுங்கு நிலவரம், வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்காக செயல்படும் மறுவாழ்வு முகாம்கள் பற்றிய விவரம், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட விவரம்உள்ளிட்டவை அந்த அறிக்கையில் இருக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE