மகாராஷ்டிரா அரசியல் சூழல் பிஹார், உ.பி.யில் ஏற்படும் - அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஏற்பட்டது போன்ற அரசியல் சூழ்நிலை பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்திலும் ஏற்படும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையிலான 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆளும் பாஜககூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே நேற்று கூறியதாவது: மகாராஷ்டிராவில் ஏற்பட்டது போன்ற அரசியல் சூழ்நிலை பிஹார் மற்றும் உத்தரபிரதேசத் திலும் ஏற்படும். குறிப்பாக பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்துவதால் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் மீது அவரது கட்சி எம்எல்ஏ-க்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

இதுபோல, உ.பி.யில் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியும் பாஜக கூட்டணியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதியும் ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளமும் இணைந்து செயல்பட்டு வந்தன. இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஜெயந்த் சவுத்ரி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE