பெங்களூருவில் ஜூலை 17, 18-ல் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம்: காங்கிரஸ் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடக்கும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், "பாட்னாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தினைத் தொடர்ந்து அடுத்தக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். பாசிசம் மற்றும் ஜனநாயக விரோத சக்திகளை தோற்கடித்து நாட்டை முன்னேற்றப் பாதையில் எங்களின் பார்வையில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திங்கள்கிழமை காலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி. வேணுகோபால், "எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடுவதற்கு முன்பாக நிச்சயம் இந்தக் கூட்டம் நடைபெறும். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி ஊழல் குற்றச்சாட்டுக்களை சமீபத்தில் முன்வைத்தார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிய அரசியல் நாடகம் அரங்கேறி இருக்கிறது. அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளின் விளையாட்டுதான் இது என்பது தெளிவாகி இருக்கிறது.

பாஜகவுக்கு எதிராக இன்னும் வலுவாக நாங்கள் போராடுவோம். இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பாதிக்காது. இது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி விவகாரம். அந்தக் கட்சியின் மிகப் பெரிய தலைவர் சரத் பவார். கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை கையாளும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. ஒரு கட்சியில் இருந்து சில தலைவர்கள் வெளியேறுவதால் கட்சியின் மற்ற உறுப்பினர்கள் அவர்களோடு சென்றுவிடுவார்கள் என்று கருத முடியாது" என்று தெரிவித்தார்.

திரிணமூல் கட்சி ட்வீட்: மகாராஷ்டிரா சிக்கலுக்கு மத்தியில், திரிணமூல் கட்சியின் டெரெக் ஓ பிரைன் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை முன்மொழிந்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில், பெங்களூரு கூட்டம் அனைவரும் ஒருவருக்காக, அனைவருக்காவும் ஒருவர் என்று கூறியுள்ளார். மேலும், அடுத்தக் கூட்டம் பற்றிய காங்கிரஸின் அறிவிப்பு ட்வீட்டை அவர் இணைத்துள்ளார்.

பாட்னா கூட்டம்: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஏற்பாட்டின் பேரில், எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவில் கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, அடுத்தக் கூட்டம் இமாச்சலப் பிரதேசத் தலைநகர் ஷிம்லாவில் ஜூலை 10-12 தேதிகளில் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், ஷிம்லாவில் தற்போதுள்ள வானிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூலை 13-14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்