குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் சொகுசு படகு சேவையை தொடங்கினார் அமித் ஷா

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: சபர்மதி ஆற்றில் ‘அக்‌ஷர் ரிவர் குரூஸ்’ என்ற பெயரில் சொகுசு படகு சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக பொறுப்பேற்றபோது சுற்றுலா துறையை மேம்படுத்த முன்னுரிமை வழங்கினார். குறிப்பாக, அகமதாபாத் வழியாக பாயும் சபர்மதி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

இந்த நிலையை மாற்ற சபர்மதி ஆற்றை தூய்மைப்படுத்த நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்தார். ஆற்றங்கரை ஓரம் பூங்காவை உருவாக்கி அழகுபடுத்தினார். இதனால் மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

இப்போது இங்கிருந்து ‘அக்‌ஷர் ரிவர் குரூஸ்’ என்ற படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. 30 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் படகு 2 இன்ஜின்களைக் கொண்டிருக்கும். இதில், இசையை கேட்டுக் கொண்டே 2 மணி நேரம் பயணம் செய்யலாம். சைவ உணவுகளும் இதில் பரிமாறப்படும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 180 லைப் ஜாக்கெட்கள், தீ தடுப்பு அமைப்புகள், அவசரகால மீட்புப் படகுகள் உள்ளிட்ட வசதிகள் இந்தப் படகில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE