மகாராஷ்டிர பேருந்து விபத்து: 10 நிமிடங்களுக்குள் எல்லாம் முடிந்து விட்டது - உயிர் தப்பிய பயணி பேட்டி

By செய்திப்பிரிவு

புல்தானா: மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் பயணிகள் பேருந்து கடந்த 1-ம் தேதி அதிகாலை கவிழ்ந்து தீப்பிடித்ததில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிர் தப்பித்த பயணி யோகேஷ் கவாய் கடைசி நிமிடங்களில் நடந்த சம்பவம் பற்றி கூறும்போது, ‘‘பேருந்து மோதி கவிழந்ததும் தீபற்றியது. நான், எனது நண்பர், அருகில் அமர்ந்திருந்த காவலர் சசிகாந்த் என்பவரும் பஸ்ஸின் ஜன்னலை உடைத்தோம். நாங்கள் வெளியேறிய போது, மற்றவர்கள் தீயில் சிக்கி கதறினர். ஒரு குழந்தையும் அதில் சிக்கியிருந்தது. நாங்கள் மற்ற ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை காப்பாற்ற முயன்றோம். ஆனால் இரண்டு முறை பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதன்பின் தீ பரவியதால், எங்களால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. 10 நிமிடங்களுக்குள் எல்லாம் முடிந்து விட்டது’’ என்றார்.

மற்றொரு பயணி ஆயுஷ் காட்கே கூறுகையில், ‘‘நான் தப்பியது அதிசயம். பேருந்து கவிழ்ந்து தீப் பற்றியதும், ஜன்னலை உடைத்து வெளியேறினேன். அதன்பின் அந்த வழியாக சிலர் தப்பினர்.விபத்தில் உயிரிழந்த நிகில் பதே என்பவரின் அண்ணன் ஹர்ஷத் கூறுகையில், ‘‘என் தம்பி வேலை விஷயமாக புனே சென்றான். ஆனால் அதுவே, அவனது இறுதி பயணமாகிவிட்டது’’ என்றார். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE