மகாராஷ்டிரா | நாக்பூர் எக்ஸ்பிரஸ் சாலையில் பேருந்து தீப்பிடித்து விபத்து - 25 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

யவத்மா: மகாராஷ்டிரா விரைவு சாலையில் பேருந்து தீப்பிடித்ததில் 25 பேர் பலியாகினர்.

மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் புல்தானாவில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தீ விபத்தில் சிக்கி மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக பேசியுள்ள புல்தானா எஸ்பி பாபுராவ் மகாமுனி, "பேருந்தில் இருந்து இதுவரை 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பேருந்தில் மொத்தம் 32 பேர் பயணம் செய்தனர். 6-8 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் டிராவல்ஸ் பேருந்து புனே நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பிம்பால்குடா கிராமம் அருகே அதிகாலை 1.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மோதியுள்ளது. பின்னர் சாலையில் உள்ள டிவைடரில் மோத தீ பற்றியது. பயணிகளில் பலர் நாக்பூர், வார்தா மற்றும் யவத்மால் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE