திரிபுரா தேர் விபத்து | மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் மாணிக் சாஹா உத்தரவு

By செய்திப்பிரிவு

உனகோட்டி: திரிபுராவில் புதன்கிழமை தேரில் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட விபத்து குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டுள்ளார்.

திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டத்தில் உள்ள குமார்காட் கிராம ஜெகந்நாதர் கோயிலில் கடந்த 10 நாட்களாக தேர்த் திருவிழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை தேர் நிலைக்குத் திரும்பும் விழா நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த போது மேல்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் தேரை வடம்பிடித்து இழுத்த மூன்று குழந்தைகள், 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் மாணிக் சாஹா, சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குமார்காட் விரைந்து சென்று காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், "காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும். தேவைப்பட்டால் சிறந்த சிகிச்சைக்காக காயமடைந்தவர்கள் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த விபத்து குறித்து உனாகோட்டி மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்த விபத்து குறித்து துறை ரீதியில் விசாரணை நடத்தி விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில மின்சாரத்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத், திரிபுரா ஸ்டேட் எலக்ட்ரிசிட்டி கார்ப்பரேஷன் லிமிட்-ன் டிஜிஎம் க்கு உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் திரிபுரா மாநில அரசு, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், 60 சதவீதம் தீக்காயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், 40 முதல் 60 சதவீதம் காயமடைந்தவர்களுக்கு ரூ.75 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.75 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குமார்கோட்டில் உல்டோ ரத் யாத்திரையில் நடந்த விபத்து மிகவும் துயரமளிக்கிறது. இந்த விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த அனுதாபங்கள். காயமைடந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடையை வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE