துப்பாக்கியால் சுட்டது யார் என தெரியவில்லை: பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்

By செய்திப்பிரிவு

சஹாரன்பூர்: உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் தியோபந்த் நகரில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் நேற்று மாலை காரில் சென்றுள்ளார். அப்போது வேறு காரில் சென்ற மர்ம நபர்கள் ஆசாத் சென்ற காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் லேசாக காயமடைந்த ஆசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சஹாரன்பூர் காவல் கண்காணிப்பாளர் விபின் தடா கூறும்போது, “சந்திரசேகர் ஆசாத் சென்ற கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் 2 முறை சுட்டுள்ளனர். இதில் ஒரு குண்டு அவர் மீது லேசாக உரசி உள்ளது. எனினும் அவர் நலமுடன் உள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.

இதுகுறித்து ஆசாத் போலீஸாரிடம் கூறும்போது, “என்னுடைய இளைய சகோதரர் உட்பட 5 பேர் காரில் சென்றோம். அப்போது துப்பாக்கியால் சுட்டது யார் என எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னுடன் வந்தவர்கள் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர். அந்த கார் சஹாரன்பூர் நோக்கிச் சென்றது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE