'எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம்; கட்சி பதவி கொடுங்கள்' - அஜித் பவார் திடீர் போர்க்கொடி

By செய்திப்பிரிவு

மும்பை: எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ஆர்வம் இல்லை; அதனால் என்னை அதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அதன் மூத்த தலைவர் அஜித் பவார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், "மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். மாறாக, கட்சியில் எதாவது பொறுப்பில் என்னை நியமிக்க வேண்டுகிறேன். எதிர்க்கட்சித் தலைவராக நான் சரியாக செயல்படவில்லை என்று சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வம் இல்லை.

எனினும் கட்சி எம்எல்ஏக்களின் வற்புறுத்தலால் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டேன். எனவே, அதில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். மாறாக, கட்சியில் எனக்கு பொறுப்பு வேண்டும். கட்சி அமைப்பில் எனக்கு எந்தப் பதவி ஒதுக்கப்பட்டாலும் சரி, அதற்கு நியாயம் சேர்ப்பேன். இந்த கோரிக்கை குறித்து என்சிபி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்" என்று புதிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

கோரிக்கையின் பின்னணி: தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி அரசியல் தீவிரமடைந்து காணப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சித் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், தனது ஆதரவு எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டியதால் சர்ச்சை எழுந்தது. கட்சிக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தி தலைமைப் பொறுப்பை தன் வசப்படுத்த அஜித் பவார் மேற்கொண்ட முயற்சியாக அது பார்க்கப்பட்டது.

இந்த விவகாரத்தின் பின்னணியில், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். சரத் பவாரின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரே தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வலியுறுத்தலை அடுத்து தலைவர் பதவியில் நீடிப்பதாக சரத் பவார் தெரிவித்தார்.

இதன்பின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25ம் ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் துணைத் தலைவராக தனது மகளான சுப்ரியா சுலேவை சரத் பவார் நியமித்தார். அதேபோல், மற்றொரு துணைத் தலைவராக பிரபுல் படேல் நியமிக்கப்பட்டார். அஜித் பவாரின் முன்னணியில் இருவருக்கும் இந்த பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில்தான் தற்போது அஜித் பவார் புதிய கோரிக்கையை கட்சி தலைமையிடம் எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE