எலும்பு முறிவு ஏற்பட்ட மகனுக்கு சக்கர நாற்காலி கிடைக்காததால் மருத்துவமனை மாடிக்கு ஸ்கூட்டரில் சென்ற வழக்கறிஞர்

By செய்திப்பிரிவு

கோட்டா: மருத்துவமனையில் சக்கர நாற்காலி கிடைக்காததால், காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகனை, மின்சார ஸ்கூட்டரில் ஏற்றி, லிப்ட் வழியாக 3வது தளத்துக்கு சென்ற வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ளது எம்பிஎஸ் மருத்துவமனை. மிகப் பெரிய மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு நோயாளிகளுக்கு சற்கர நாற்காலி போதிய அளவில் இல்லை. இந்த மருத்துவமனைக்கு மனோஜ் ஜெயின் என்ற வழக்கறிஞர், காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகனுடன் சிகிச்சை பெற கடந்த வியாழக்கிழமை சென்றார்.

மருத்துவமனையின் 3வது தளத்தில் எலும்பு முறிவு பிரிவு இருந்தது. இதனால் மருத்துவமனை ஊழியர்களிடம் சற்கர நாற்காலியை கொண்டுவரும்படி கூறினார். அவர் கள் சற்கர நாற்காலி தற்போது இல்லை என கூறியுள்ளனர்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டவரை கையில் தூக்கி செல்வது சிரமம் என்பதால், தனது மின்சார ஸ்கூட்டரில் வைத்து, லிப்ட் வழியாக 3-வது தளத்துக்கு செல்ல மருத்துவமனை ஊழியர்களிடம் அனுமதி கேட்டார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் மகனுடன் மின்சார ஸ்கூட்டரில் மருத்துவமனைக்குள் சென்று லிப்ட் வழியாக 3-வது தளத்துக்கு சென்றார்.

மருத்துவமனைக்குள் ஒருவர் ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு வருவதை பார்த்த மருத்துவமனையின் 3-வது தள பொறுப்பாளர் தேவ்விகினந்த், மனோஜ் ஜெயினை இடைமறித்து ஸ்கூட்டரின் சாவியை பறித்தார். இதனால் இருவருக்கும் இடையேமருத்துவமனையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் ஸ்கூட்டியை ஓட்டி செல்வது விதிமீறல் என மருத்துவமனை பொறுப்பாளர் கூற, நோயாளிகளுக்கு போதிய அளவில் சக்கர நாற்காலி இல்லாதது மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பற்றதன்மை என வழக்கறிஞர் கூற மருத்துவமனையில் அமளி நிலவியது.

அங்கு மருத்துவமனையின் காவல் பணியில் இருந்த போலீஸார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் எம்பிஎஸ் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE