மணிப்பூர் கலவரம் | அரசியல்வாதிகளை குறிவைக்கும் வன்முறை கும்பல்களால் பதற்றம்

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த மோதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்ததாகவும், பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதிகாரிகள் இன்று (ஜூன் 17) தெரிவித்தனர். இந்தக் கலவரங்களில் அரசியல்வாதிகளை வன்முறை கும்பல்கள் தொடர்ந்து குறிவைத்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 3-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக வன்முறை, கலவரம் நீடிக்கிறது. இதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முதன்முதலாக மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மைதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3-ம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவி, மணிப்பூர் பற்றி எரிந்தது.

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் மாநிலத்தில் கலவரக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் நடந்து வருகிறது.

வடகிழக்கு மாநிலத்தில் நடந்து வரும் இந்த இனக்குழு மோதல்களின் பல்வேறு சம்பவங்களில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசியல்வாதிகளின் வீடுகள் அடையாளம் தெரியாத கும்பல்களால் தாக்கும், தீவைக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.

ஆர்.கே.ரஞ்சன் சிங்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள வெளியுறவுத் துறை மற்றும் கல்வித் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு வியாழக்கிழமை பின்னிரவு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இதற்கு சில நாட்களுக்கு முன்பாக மே 23-ம் தேதி வன்முறையாளர்கள் சிலர் ரஞ்சன் சிங்கின் வீட்டிற்குள் நுழைந்தனர். பாதுகாப்புப் படை வீரர்களால் அப்போது அவர்களை விரட்டமுடிந்தது. இந்தச் சம்பவத்தில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நெம்சா கிப்ஜென்: மணிப்பூர் அரசின் அமைச்சரான நெம்சா கிப்ஜென் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு அரசியல்வாதியாவர். இம்பாலில் இருக்கும் நெம்சாவின் அதிகாரபூர்வ இல்லம் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வன்முறையாளர்களால் தீவைக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது அவர் வீட்டில் இல்லை.

மணிப்பூர் அமைச்சரவையில் இருக்கும் ஒரே பெண் அமைச்சரான நெம்சா குகி இனத்தைச் சேர்ந்தவர். குகி - ஜோமி - சின் - ஹ்மர் இனமக்களுக்கு தனி நிர்வாகம் வேண்டும் என்று கோரிய 10 குகி அமைச்சர்களில் இவரும் ஒருவர்.

கோவிந்தாஸ் கொண்தவுஜம் (Govindas Konthoujam): மணிபூரின் பொதுப்பணித் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கோவிந்தாஸ் கொண்டதவுஜனின் இம்பாலில் உள்ள வீடு மே 24ம் தேதி வன்முறையாளர்களால் தாக்கப்பட்டது. மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரான இவரது வீடு 100 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட போது அமைச்சர் குடும்பத்துடன் வெளியில் இருந்தார்.

இதற்கு அடுத்த நாள் மற்றொரு மாநில அமைச்சர் டி. பிஸ்வாஜித் சிங்-ன் இம்பால் வீடு வன்முறைக் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டது.

வுங்ஜாகின் வால்டே (Vungzagin Valte): தான்லோன் தொகுதி பாஜக எம்எல்ஏ வுங்ஜாகின் வால்டே, மாநில முதல்வர் பிரேன் சிங் தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில் கலந்து கொண்டு வீடுதிருப்பிக் கொண்டிருந்த போது வன்முறை கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டார். அந்தத் தாக்குதலில் எம்எல்ஏ படுகாயமடைந்தார். தற்போது அவர் டெல்லியில் சிசிச்சை பெற்று வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE