ஆந்திர ஆளும் கட்சி எம்.பி. மனைவி, மகன் கடத்தல்

By என். மகேஷ்குமார்

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஆளும் கட்சி எம்பியின் மனைவி, மகன் உள்ளிட்ட 4 பேரை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்பியாக சத்யநாராயணா உள்ளார். இவர் கடந்த 13-ம் தேதி பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். அப்போது விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆனந்தபூரில் வசித்து வரும் எம்பியின் மகன் சந்துவை சந்திக்க, எம்பியின் மனைவி ஜோதி மற்றும் உறவினர்கள் காரில் சென்றனர். இதனை அறிந்த ஒரு கும்பல் சந்துவின் வீட்டருகே காந்திருந்தது.

எம்பியின் மனைவி ஜோதி அங்கு வந்ததும், அவரையும், மகன் சந்து, ஆடிட்டர் மற்றும் உறவினர் வெங்கடேஸ்வர ராவ் ஆகிய 4 பேரை அந்த கும்பல் காரில் கடத்தி சென்றது. கடந்த 13-ம் தேதி முழுவதும் எம்பி சத்யநாராயணாவின் ஆதரவாளர்கள், கடத்தப்பட்டவர்களை பல இடங்களில் தேடினர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் பிரச்சினையே கடத்தலுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE