பெங்களூரு: 40 சதவீத ஊழல் அரசு என பாஜகவை விளம்பரப்படுத்திய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் கர்நாடக பாஜக பொதுச்செயலாளரான கிருஷ்ணபிரசாத் கடந்த மே 9-ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ''கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிய போது காங்கிரஸ் சார்பில் நாளிதழ்களில் பாஜக அரசை 40 சதவீத ஊழல் ஆட்சி என விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் ரூ.1.5 லட்சம் கோடியை கொள்ளை அடித்ததாக பாஜக அரசின் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் பாஜகவின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 499 மற்றும் 500 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரினார்.
இந்த மனுவை பரிசீலித்த பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றம் நேற்று ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகிய 3 பேருக்கும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனுவின் மீது வரும் ஜூலை 27-ம் தேதி விசாரணை நடைபெறும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தது.