புதுடெல்லி: டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோரின் ட்விட்டர் கணக்குகள் குறித்த தகவல்களைப் பகிருமாறு இந்திய அரசு தங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக ட்விட்டர் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸி பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில், அவர் தெரிவித்தது முற்றிலும் தவறானது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசைக் கடுமையாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் கணக்குகள் தொடர்பாகவும் நிறைய கோரிக்கைகளை இந்திய அரசு வைத்ததாக அவர் கூறியுள்ளார். அவ்வாறு பகிராவிட்டாலோ இல்லை அவர்கள் கூறிய கணக்குகளை முடக்காவிட்டாலோ ட்விட்டர் ஊழியர்கள் மீது சோதனைகள் நடத்தப்படும் என்று எச்சரித்ததாகவும் டார்ஸி கூறியுள்ளார்.
திங்கள்கிழமை (ஜூன் 12) அன்று 'பிரேக்கிங் பாயின்ட்ஸ்' என்ற யூடியூப் நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் ஜேக் டார்ஸி இதனைத் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக அவர் இருந்தபோது எந்தெந்த வெளிநாடுகளில் இருந்து என்ன மாதிரியான அழுத்தங்களை சந்திக்க நேர்ந்தது என்பதை இதில் பகிர்ந்திருந்தார். அவரது குற்றச்சாட்டு அதீத கவனம் பெற்றது.
“ஜேக் டோர்ஸி கூறியது முற்றிலும் தவறானது. அவர் தனது மோசமான செயல்களை இதன் மூலம் மறைக்க முயற்சிக்கிறார்” என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
» நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 99.99% பெற்று தமிழக மாணவர் பிரபஞ்சன் முதலிடம்
» தமிழக தலைமைச் செயலக அறையில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா முதல் கார்கே வரை கண்டனம்