பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்குமாறு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதற்காக மத்திய அரசு ரூ.8,000 கோடி ஒதுக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமித் ஷா தலைமையில் டெல்லியில் இன்று (ஜூன் 13) நடைபெற்றது. இதில், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்கள், மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, "பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை மாநில அரசுகள் தயாரிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு ரூ.8 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருக்கிறது. 3 முக்கிய திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது.

மாநில தீ அணைப்புத் துறையின் சேவைகளை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெருநகரங்களில் வெள்ள அபாயத்தைக் குறைக்க மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய ஏழு பெருநகரங்களுக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ. 825 கோடி மதிப்பீட்டில் தேசிய நிலச்சரிவு அபாயக் குறைப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE