மகளின் திருமணத்தை வீட்டிலேயே எளிமையாக நடத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மகளின் திருமணத்தை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடத்தினார்.

நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமயிக்கும், பிரதீக் என்ற இளைஞருக்கும் பெங்களூருவில் நேற்று (ஜூன் 8) திருமணம் நடைபெற்றது. நிர்மலா சீதாராமனின் வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரின் பங்கேற்பு இல்லாமல் எளிய முறையில் தனது மகளின் திருமணத்தை நிர்மலா சீதாராமன் நடத்தி உள்ளார்.

பிராமண சமூக முறைப்படியும், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா அதமரு மடத்தின் தலைவர் விஸ்வபிரிய தீர்த்த ஸ்ரீபாத-வின் ஆசீர்வாதத்துடனும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது இளஞ்சிவப்பு நிற புடவையை மணமகள் அணிந்திருந்தார். மணமகன் பஞ்சகச்சம் அணிந்திருந்தார். மணமகளின் தாயாரான நிர்மலா சீதாராமன் நீல நிற மொலகல்முரு புடவையை அணிந்திருந்தார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். தொழில்முறை பத்திரிகையாளரான பரகலா வங்கமயி, மிண்ட் பத்திரிகையில் தற்போது பணியாற்றி வருகிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்ஏ ஆங்கிலம் முடித்துள்ள அவர், போஸ்டன் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE