விமானங்களில் பயணிகள் அத்துமீறல் 37% அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு (ஐஏடிஏ) துணை இயக்குநர் ஜெனரல் கான்ராட் கிளிஃபோர்ட் நேற்று கூறியதாவது:

கடந்த 2021-ம் ஆண்டில் 835 விமானங்களுக்கு ஒரு பயணி அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் 2022-ல் 568 விமானங்களுக்கு ஒரு சம்பவமாக அதிகரித்துள்ளது. அதாவது விமான பயணிகளின் அத்துமீறல் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

விமானப் பணியாளர்களுடன் வாக்குவாதம், இணக்கமின்மை, வார்த்தை துஷ்பிரயோகம், போதைப் பொருட்களை பயன்படுத்துதல் ஆகிய சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன. ஆனால், உடல் ரீதியான துஷ்பிரயோக சம்பவங்கள் மிகவும் அரிதான அளவிலேயே இருந்தன. உலகளாவிய விமானப் போக்குவரத்தில் 83 சதவீதத்தை கைவசம் வைத்திருக்கும் 300 விமான நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.

ஒரு பயணியின் அத்துமீறல் என்பது ஏனைய அனைத்து பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறி விடுகிறது. சிகரெட் புகைத்தல், சீட் பெல்டை போட மறுத்தல், மது அருந்துதல் போன்ற சம்பவங்கள் விமானங்களில் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் பயணிகளை மாண்ட்ரீல் விதி முறை 2014-ன் கீழ் தண்டனைக்கு உட்படுத்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கான்ராட் கிளிஃபோர்ட் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE