ஒடிசா ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமா? - சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை

By செய்திப்பிரிவு

பாலசோர்: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘விபத்துக்கு சதி வேலை காரணமா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது’’ என்று தெரிவித்தார். வரும் 7-ம் தேதிக்குள் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிந்து, ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் அவர் கூறினார்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் பகுதியில் கடந்த 2-ம் தேதி தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீதுஷாலிமார் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்மோதியது. அப்போது, எதிர்திசையில் வந்த பெங்களூரூ–ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும்விபத்தில் சிக்கியது.

இந்த பயங்கர விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட சில சடலங்கள் 2 முறை கணக்கிடப்பட்டதால், எண்ணிக்கையில் தவறு நடந்துள்ளது. ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஒடிசா தலைமைச் செயலர் பிரதீப் ஜெனா நேற்று தெரிவித்தார்.

இதுவரை 78 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய சடலங்கள், புவனேஸ்வர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. மரபணு பரிசோதனைக்கு பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, விபத்து பகுதியில் தடம் புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டு, தண்டவாள சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பார்வையிட்டார். அப்போது, அவர் கூறியதாவது:

சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை: ரயில்வே சிக்னல்கள் ‘இன்டர்லாக்கிங்’ முறையில் இயக்கப்படுகின்றன. பாயின்ட் இயந்திரம், இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட பிரச்சினையே ரயில் விபத்துக்கு மூலகாரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தண்டவாள பாயின்ட் இயந்திரத்தில் செய்யப்பட்டிருந்த மாற்றத்தால் இன்டர்லாக்கிங்கில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள்.

இப்போதைக்கு விபத்து தொடர்பான முழுமையான விவரங்களை கூற முடியாது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே முழு விவரம் தெரியவரும். விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

அதிநவீன இயந்திரங்களின் உதவியுடன் தண்டவாளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 1,000 பேர் ஈடுபட்டுள்ளனர். ஜூன் 4-ம் தேதி இரவுக்குள் இருதண்டவாளங்கள் சரி செய்யப்படும். 7-ம் தேதிக்குள் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து, ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும். இவ்வாறு அவர் கூறினார். மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் அப்போது உடன் இருந்தார்.

தீவிரவாதிகள், சமூகவிரோதிகளின் சதி வேலையால் ரயில் கவிழ்க்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் வைஷ்ணவ், ‘‘அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே முழு விவரம் தெரியும்’’ என்றார்.

ரயில்வே வட்டாரங்கள் கூறும்போது, ‘‘இன்டர்லாக்கிங் தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது. இது செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பம். இதில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை. வெளிநபர்கள் தண்டவாள பாயின்ட் இயந்திரத்தை சேதப்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE