இந்திய பெருநகரங்களில் டீசலில் இயங்கும் 4 சக்கர வாகனங்களுக்கு 2027-க்குள் தடை: அரசு குழு பரிந்துரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மற்றும் மாசடைந்த இந்திய நகரங்களில் டீசலில் இயங்கும் 4 சக்கர வாகனங்களுக்கு 2027-க்குள் தடை விதிக்க வேண்டும் என மத்திய பெட்ரோலியம் - இயற்கை நிலவாயு அமைச்சகம் அமைத்துள்ள மாற்று எரிசக்தி ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த நகரங்களில் மின்சாரம் மற்றும் எரிவாயுவில் இயங்கும் வாகனங்களுக்கு மாற வேண்டும் எனவும் இந்த குழு தெரிவித்துள்ளது.

டீசலில் இயங்கும் பேருந்துகளை அடுத்த ஆண்டு முதல் நகர பயன்பாட்டுக்கு மேற்கொண்டு சேர்ப்பதை தவிர்ப்பது, மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான ஊக்கம் கொடுப்பது, ஃபேம் திட்டத்தின் கீழ் வழங்கும் ஊக்கத்தொகையை நீட்டிப்பது, சரக்கு போக்குவரத்துக்கு ரயில் மற்றும் எரிவாயுவில் இயங்கும் ட்ரக்குகளை பயன்படுத்துவது, தொலைதூர பேருந்துகள் மின்சாரம் மற்றும் எரிவாயுவில் இயங்கும் வகையில் இருப்பதை உறுதி செய்வது, அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் வகையில் ரயில் போக்குவரத்தை அமைப்பது என தனது அறிக்கையில் இந்த குழு பரிந்துரைத்துள்ளது. இவை அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால இலக்கையும் இந்த குழு குறிப்பித்துள்ளது.

பைங்குடில் (கிரீன்ஹவுஸ்) வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதை குறைக்கும் இலக்கோடு மின்சார வாகனம் உள்ளிட்ட மாற்று முறை எரிசக்தி பயன்பாட்டினை இந்தியா முன்னெடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE