கொடைக்கானலில் நிழல் இல்லாத நாள் நிகழ்வு: ஆர்வமுடன் கண்டு களித்த சுற்றுலா பயணிகள்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: நிழல் இல்லாத நாள் நிகழ்வு, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சில நிமிடங்கள் மட்டுமே தெளிவாகக் காணப்பட்ட நிலையில், இதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழக்கூடிய நிழல் இல்லாத நாள், நேற்று திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ம‌ட்டும் தென்பட்டது. பூமியானது 23 டிகிரி சாய்ந்து, அச்சரேகையில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.

அவ்வாறு சுற்றும்போது, சூரியனை நோக்கி சாய்ந்து இருக்கும் கோணமும் சிறிது சிறிதாக மாறிக்கொண்டே இருக்கும். அவ்வாறு மாறும்போது, ஒரு சில நாட்களில் மட்டும் பூமியின் அச்சு சூரியனை நோக்கி சாயாமல் பக்கவாட்டில் இருக்கும். அப்போது நிழலானது, நேர்கோட்டு பகுதியில் செங்குத்தாக விழுகிறது. இந்த நாள், நிழல் இல்லாத நாள் என அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வினை, கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில், நேற்று பிற்பகல் 12.20 மணியளவில் சூரியன் தலைக்கு மேல் இருக்கும் போது, நிழலானது எந்த பக்கமும் சரியாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும்.

செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அருகிலேயே விழும் நிகழ்வை, வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் எபிநேச‌ர் காட்சிப்படுத்தினார். இந்த அரிய நிகழ்வை, சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இதுபோன்ற நிக‌ழ்வு, ஆக‌ஸ்ட் மாத‌ம் 26-ம் தேதி பிற்பகல் 12:22 ம‌ணிக்கு நிகழ‌விருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE