கோவையில் யானைகள் தாக்கியதில் ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு

By க.சக்திவேல்

கோவை: கோவையில் யானைகள் தாக்கியதில் ஒரே நாளில் இருவர் உயிரிழந்தனர்.கோவை தடாகம், 24 வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (36), இவர் மாங்கரை சோதனைச்சாவடி அருகே உள்ள தனது மாமானார் வீட்டில் இருந்துள்ளார். இன்று (மார்ச் 2) அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த ஆண் யானையை விரட்ட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

அந்தப் பகுதியில் யானை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினர் மகேஸ்குமாரின் உடல் அருகே நின்றிருந்த யானையை விரட்டினர். அதோடு தடாகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கோவை ஆனைகட்டி அருகே உள்ள தூவைப்பதியைச் சேர்ந்தவர் மருதாசலம் (67). இவர் அந்தப் பகுதியில் ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் இன்று காலை இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். புதர்கள் நிறைந்த பகுதிக்கு சென்றபோது ஓடையில் நீர்அருந்திவிட்டு வந்த 2 பெண் யானைகள், ஒரு குட்டி யானை கொண்ட கூட்டம் மருதாசலத்தை எதிர்பாராதவிதமாக தாக்கியதில், அவர் அங்கேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறை, காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வனத் துறையினர் கூறும்போது, “உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உடனடி நிவாரணமாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இறப்பு சான்று, வாரிசு சான்று உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு எஞ்சியுள்ள ரூ.4.50 லட்சம் அவர்களுக்கு பெற்றுத் தரப்படும். தொடர்ந்து களப்பணியாளர்கள் மூலம் வனத்தைவிட்டு வெளியேறும் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE