ஓசூரில் டிவிஎஸ் ஆலைப் பகுதியில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூரில் உள்ள டி.வி.எஸ் தொழிற்சாலை பகுதிக்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பறவைகள் வருகை அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக டிவிஎஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “உலகளவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், விலங்குகள், தாவரங்கள், உள்பட பல்வேறு உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பொக்கிஷம் போல் பேணி பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும், செயல்பட்டு வருகிறது. எதிர்கால உலகிற்கு அவசியமான பல்லுயிர் பாதுகாப்பை ஊக்குவித்து வருகிறது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் இந்த செயல்பாடுகள், அந்நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஓசூரில் செயல்பட்டு வரும் தனது தொழிற்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கையின் வரமாக அமைந்திருக்கும் பல்லுயிர்களை பேணுவதிலும், பாதுகாப்பதிலும் எப்போதும் உத்வேகத்துடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஓசூர் டி.வி.எஸ் மோட்டார் தொழிற்சாலையில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் காடு, ஆயிரக்கணக்கான மரங்கள், பறவைகள் சரணாலயம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஆர்கானிக் கம்போஸ்ட் மையம் [Bird Sanctuary, Butterfly Garden, Botanical Park, Organic Compost Centre] மற்றும் 18 குளங்கள் என இயற்கையின் மிகப்பிரமாதமான அம்சங்கள் நிறைந்த பசுமை படர்ந்த பல்லுயிர்களின் இல்லமாக இருந்து வருகிறது. இந்த மிகப்பெரும் சரணாலயம் கடந்த 22 ஆண்டுகளாக அதன் சுற்றுப்பகுதியில் பெயின்டட் ஸ்டார்க் [Painted Stork] என்றழக்கப்படும் மஞ்சள் மூக்கு நாரைகளின் மிகப்பெரிய இனப்பெருக்க பிரதேசங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இங்கு இந்த மஞ்சள் மூக்கு நாரைகள் தங்கள் கூடுகளைக் கட்டுகின்றன. தங்களது குஞ்சுகளை இந்தக்கூட்டில் வைத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் வளர்ந்தப் பின்னர் அவற்றை பல்வேறு பிரதேசங்களில் இருக்கும் தங்களது இல்லப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றன. இயற்கையின் இந்த அதிசயங்கள் அனைத்தும் தொழிற்சாலையில் மிகப் பரபரப்பாக நடக்கும் அன்றாட உற்பத்தி செயல்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஓசூர் வனப் பிரிவு சமீபத்தில் பறவைகள் கணக்கெடுப்பை மேற்கொண்டது. அந்த பறவைகள் கணக்கெடுப்பின் போது, கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி [Kenneth Anderson Nature Society (KANS)] அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன் 15 நீர்நிலைகளில் 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. மேலும் இந்த 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டு கணக்கெடுப்பின் போது பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், மஞ்சள் மூக்கு நாரைகள் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஈரநிலப்பகுதிகளில் மட்டுமே கூடு கட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது.

இயற்கையின் மீதான ஆர்வத்தையும், இயற்கை தொடர்பான கல்வியையும், ஊக்குவிக்கும் வகையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலையில் அமைந்திருக்கும் சரணாலயத்தில் பள்ளி மாணவர்கள் வந்து பார்வையிடும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள சரணாலயத்திற்கு பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வருகைத் தருவதை கெளரவமாக மதிப்பதோடு, இந்த அழகான உயிரினங்களுக்கு தொடர்ந்து புகலிடத்தை வழங்கவேண்டுமென்பதில் மிக உறுதியாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE