கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வெலகலஹள்ளி வெங்கடப்பன் கொட்டாய் பகுதியில் உள்ள மாந்தோப்பில் நேற்று ஆண் யானை உயிரிழந்து கிடந்தது.
தகவல் அறிந்து அங்கு சென்ற மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, உதவி வனப் பாதுகாவலர் ராஜ மாரியப்பன் உள்ளிட்டோர் உயிரிழந்த யானையைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கூறியதாவது: உயிரிழந்த ஆண் யானைக்கு 15 முதல் 20 வயதுக்குள் இருக்கும். இப்பகுதியில் கடந்த 4 மாதங்களாகச் சுற்றி வந்த 3 யானைகளில் இது ஒன்றாகும்.
மாந்தோப்பு அருகில் உள்ள தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் மின் மோட்டாருக்குச் செல்லும் ஒயர் யானையின் காலில் சிக்கிய போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. கோவையிலிருந்து வனத்துறையின் கால்நடை மருத்துவ குழுவினர் இன்று (14-ம் தேதி) வந்த பின்னர் யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.