பிளாஸ்டிக் மறுசுழற்சி விழிப்புணர்வுக்கு 50,000 கிமீ பயணம்: சைக்கிளில் இந்தியாவை வலம் வரும் இளைஞர்

By செய்திப்பிரிவு

ஓசூர்: பிளாஸ்டிக் மறுசுழற்சியை வலியுறுத்தி, இந்தியா முழுவதும் 50 ஆயிரம் கிமீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திரா இளைஞருக்கு தேன் கனிக்கோட்டையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் குர்ரம் பெஞ்சாலா சைதன்யா (22). இவர் பிளாஸ்டிக் மறுசுழற்சியை வலியுறுத்தி, ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் வழியாக 2,700 கிமீ தூரத்தைக் கடந்து தமிழக எல்லையான தேன்கனிக்கோட்டைக்கு வந்த அவருக்கு வனிதா கிளப் மற்றும் வாசவி கிளப் உறுப்பினர்கள், பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக குர்ரம் பெஞ்சாலா சைதன்யா கூறியதாவது: ‘மரம் நடுதலை’ வலியுறுத்தி, கடந்த 2022-ம் மே முதல் ஜூன் வரை நெல்லூர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். மேலும், அதே ஆண்டில், ‘உணவை வீணாக்கக் கூடாது’ என்பதை வலியுறுத்தி, நெல்லூரிலிருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்.

தற்போது, ‘பிளாஸ்டிக் மறுசுழற்சியை’ வலியுறுத்தி, இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. அதன் புழக்கம் தவிர்க்கமுடியாமல் உள்ள நிலையில் அதை மறு சுழற்சி மூலம் மாசை கட்டுப்படுத்த முடியும். இதை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்ந்து 70 முதல் 100 நாட்கள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்கிறேன். பின்னர் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் என இந்தியாவில் 30 மாநிலங்களில் உள்ள 700 மாவட்டங்களில் 50 ஆயிரம் கிமீ பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE