பெரியநாயக்கன்பாளையம் அருகே இறந்த யானை குட்டியின் உடல்பாகங்கள் கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

கோவை: கோவை பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பெருகம்பதி பழங்குடியின கிராமத்துக்கு அருகே வனப்பணியாளர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வன எல்லையில் இருந்து 3 கி.மீ சென்ற போது துர்நாற்றம் வந்துள்ளது. அந்த பகுதியை ஆய்வு செய்ததில் இறந்து சில நாட்கள் ஆன ஒரு யானை குட்டியின் உடல் பாகங்கள் சிலவும், எலும்புகளும் இருந்தது கண்டறியப்பட்டது. அதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் அந்த பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், நேற்று ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையில் உடற்கூராய்வு நடைபெற்றது. பின்னர், அப்பகுதியிலேயே உடல் பாகங்கள் குழிதோண்டி புதைக்கப்பட்டடன. வனத்துறையினர் கூறும்போது, “கிடைத்த உடல் பாகங்களின் அடிப்படையில் யானை குட்டி பிறந்து சிலநாட்கள் முதல் 3 வாரங்கள் இருக்கலாம்.

உடலின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்ததால் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. யானையின் உடல் பாகங்களின் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE