தருமபுரி அடுத்த சவுளூர் பகுதியில் வனத்துக்கு திரும்பிய யானை - கிராம மக்கள் நிம்மதி

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி அடுத்த சவுளூர் பகுதியில் கரும்புத் தோட்டத்தில் நுழைந்த ஒற்றை யானை நேற்று மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பியது.

பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து வனத்தை யொட்டிய விளைநிலங்களில் மக்னா யானை நுழைந்து கடந்த சில மாதங்களாக பயிர்ச் சேதம் ஏற்படுத்தி வந்தது. இந்த யானையை கடந்த 5-ம் தேதி வனத்துறையினர்மயக்க ஊசி செலுத்தி பிடித்து ஆனைமலைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், மற்றொரு ஒற்றை யானை கடந்த 7-ம் தேதி இரவு வனத்தில் இருந்து வெளியேறி சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கடந்து தருமபுரி அருகே சவுளூர் அடுத்த முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியில் உள்ள கரும்பு வயலில் நுழைந்தது. இந்த யானையை மீண்டும் வனப் பகுதிக்கு இடம் பெயரச் செய்ய தேவையான பணிகளில் தருமபுரி வனச்சரகர் அருண் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு இந்த யானை கரும்பு வயலில் இருந்து வெளியே வந்ததை தொடர்ந்து பாப்பாரப்பட்டி அடுத்த திருமல்வாடி வனப்பகுதியை நோக்கி வனத்துறையினர் இடம்பெயரச் செய்தனர். இதனால், அச்சத்தில் இருந்த சவுளூர் சுற்று வட்டார பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE