மேட்டுப்பாளையம்: சுனாமி, நிலநடுக்கம், நிலச்சரிவு, புயல், பெரு மழை என பெரும் பேரிடர் காலங்களில் களம் இறங்கி மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் தேசிய பேரிடர் மீட்பு படையினரை இனி வரும் காலங்களில் காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்தும் பணியிலும் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனப்பகுதியில் 50 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு வனத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் நேற்று களப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துக்குள் செல்லும்போது எதிர்படும் வன விலங்குகளின் இயல்பு,
அவற்றிடம் இருந்து ஆபத்தின்றி விலகுவது எப்படி, காட்டுத்தீ உருவாகியுள்ள பகுதியை சாட்டிலைட் உதவியுடன் இயங்கும் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டறியும் முறை, புதர்காடு, புல்வெளி, அடர்ந்த காடு, பள்ளத்தாக்கு மற்றும் மலைசார்ந்த காடுகள் என பகுதிக்கேற்றவாறு மாறுபடும் காடுகளின் தன்மை, வனத்தீ பரவலை கட்டுப்படுத்தும் முறை ஆகியவை குறித்து பயிற்சியின்போது வீரர்களுக்கு விளக்கப்பட்டது.
தமிழக வனத்துறை அதிகாரி வித்யாசாகர் தலைமையிலான வனத்துறையினர் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு இந்த பயிற்சியை அளித்தனர்.